தமஸ்கு நிகழ்ச்சியின் மூலம் பவுல் தன் அழைப்பை உணர்ந்து ஆண்டவர் இயேசுவின் அருட்தொண்டனானார்.
பவுல் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர் நற்செய்திப்
பணியில் ஈடுபட்டார். அவர் கிறிஸ்துவை ஏற்கும் முன்னர் யூதச் சமயத்தைப் பரப்பும்
பணியில் ஈடுபட்டிருந்தார் என்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். பவுலின் காலத்தில்
சமயப்பரப்புப் பணி உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது (காண்க. மத், 23:15) யூதச் சமயமும், கிரேக்கச் சமயமும்
இம்முயற்சியில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்தன என்கிறார் J. எரேமியாஸ் என்ற அறிஞர்.
தர்சுவில் வாழ்ந்த ஆர்வ'மிக்க யூதனான பவுலும்கூட
இப்பணியில் ஈடுபட்டிருந்தார் என நம்ப இடமுண்டு. யூதச் சமயத்திற்கு எதிராகக்
கிளப்பிய கிறிஸ்தவத்தைக் கிள்ளி எறிய பவுல் நீண்ட நெடும் பயணங்களைத் தொடர்ந்ததும், தமஸ்கு நிகழ்ச்சிக்குப்
பின் அருட்செய்திப் பணியில் பவுல் ஈடுபட்ட தும், இதற்கு முன்னும் பவுல் யூதச் சமயப்
பரப்புப் பணியைச் செய்திருந்தார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. கலா. 5:11ன் அடிப்படையில், புல்ட்மான், போர்ன்காம், ஹேங்கல் போன்ற அறிஞர்கள், கிறிஸ்தவன் ஆவதற்கு
முன்னரேயே சமயப்பரப்புப் பணியில் பவுல் ஈடுபட்டிருந்தார் என்கின்றார்கள். காரணம்
கலா. 5:11-ல் பவுல்
விருத்தசேதனத்தைப் போதிக்கின்றார். அதாவது யூதரல்லாதோர்களை யூதராக்கும்
சமயப்பணியில் தான் பயன்படுத்திய ஒன்றை இங்கே காட்டுகின்றார் என்பதின் அடிப்படையில்
பவுல் யூதச் சமய சமயப்பரப்பாளராக இருந்திருந்தார் என்பதை உறுதியாகக் கூறலாம். அவர்
யூதச் சமயத்தின் சமயப்பரப்பாளராக இருந்து பெற்ற அறிவும் அனுபவமும், கிறிஸ்தவ நற்செய்தித்
தொண்டனாக மாறிய போது அவருக்குப் பெரிதும் உதவியது எனலாம்.
Comments
Post a Comment