பவுலின் தமஸ்கு அனுபவத்திற்கு முன் பவுல்
எப்படிப்பட்டவராய் வாழ்ந்தார் என்பதைச் சிந்தித்தால் தான் தமஸ்கு அனுபவத்தைச்
சரியாகப் புரிந்து கொள்ளமுடியும். பவுல் தனது மனமாற்றத்திற்கு முன்
வைராக்கியமுள்ள யூதனாக வாழ்ந்து வந்தார். இந்த வைராக்கியம் அவர் கிறிஸ்துவை
ஏற்றுக் கொண்ட பின்பும் அவரில் காணப்பட்டது என்றால் மிகையாகாது. பவுல் யூதரல்லாதாரிடையே
வாழ்ந்திருந்தாலும்,
யூதச்
சமயத்தின் தலையாயக் கோட்பாடாகிய ஓரிறைக் கோட்பாட்டில்(monotheism) அசையாத நம்பிக்கை உடையவராகவே
இருந்தார். (கலா. 3:20;
ரோ. 3:30). இந்த நம்பிக்கையின்
விளைவாக பிறவினச் சமயங்களையும்,
அவைகளுக்குரிய
வழிபாடுகளையும் (1கொ. 10:14, 21). அச்சமயங்களுக்குரிய
இழிவான ஒழுக்கக்கேடுகளையும் வன்மையாக எதிர்த்தார் (ரோ. 1:25மு).
யூதத் திருமறையையும் (ரோ1:20;4:3) மோசேயின் மூலம் அருளப்பட்ட
நியாயப்பிரமாணத்தையும் (ரோ. 7:12,
14, 16, 22; 3:21) யூதர்களின்
பாரம்பரியத்தையும் (கலா. 1:14)
அதிகமாக மதித்தார்.
யூத இலக்கியமான தால்மூட் என்ற நூலில் (பெராகோத்.9:7மு) எழுவகைப் பரிசேயர்களைப்
பற்றிய குறிப்பு உள்ளது. அதில் தலைசிறந்த ஏழாவது வகையைச் சேர்ந்தவர் பவுல். அதாவது உயர்ந்த உள்ளம்
கொண்ட உண்மைப் பரிசேயனாக வாழ்ந்தவர் பவுல்.
நியாயப் பிரமாணம் இறைவனால் மோசேயின் மூலம் இஸ்ரவேலருக்கு
வெளிப்படுத்தப்பட்டது. அதுவே முற்றுப் பெற்றதும், இறுதியானதுமான இறைவனின் வெளிப்பாடு.
அதுவே வாழ்வின் மையம். ஆற்றல் மிக்கது. அதன் மூலமாக மட்டுமே ஒருவன் கடவுளுக்கு
முன் நீதிமானாக ஆகமுடியும் என்றெல்லாம் நம்பி, நியாயப் பிரமாணமே வாழ்விற்கு வழி
என நம்பி வாழ்ந்து வந்தார். நியாயப் பிரமாணத்தைப் பற்றிய இந்தப் பற்றார்வமும், யூதச் சமயத்தைப் பற்றிய வைராக்கியமுமே
கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தப் பவுலைத் தூண்டியது.
ஸ்தேவான் நியாயப் பிரமாணத்தால் கடவுளுக்குக்
கீழ்படிதலான மக்களை உருவாக்க முடியாது என்று கூறிய போதும் (அப். 7:35மு), மோசேயின் இடத்தில்
இயேசுவை வைத்துப் பேசிய போதும் (அப். 6:14) பவுல்
எத்தனை ஆத்திரப்பட்டிருப்பார் என்பதை இப்போது நம்மால் உணர முடியும்.
பரிசேயர்களின் எண்ணத்திற்கும் கொள்கைக்கும் விரோதமாக, நியாயப் பிரமாணத்தைக் கடை
பிடிக்காத சாதாரண,
சமய அறிவே
இல்லாத செம்படவர்களுடனும்,
ஆயக்காரர்களுடனும்
கிறிஸ்தவர்கள் கூட்டு
வாழ்க்கை நடத்தியதைக் (அப். 4:13)
கேள்விப்பட்டப்
பவுலுக்கு எழுந்த ஆத்திரம் எவ்வளவு கடினமானது என்பதை இப்போது கற்பனை செய்து
பார்க்கலாம். மரத்திலே தூக்கிப் போடப்பட்டவன் சபிக்கப்பட்டவன் (உபா. 21:23) என்று நம்பிய பவுலின்
செவிகளில்,
சிலுவையில்
அறையுண்ட இயேசுவே மேசியா (அப். 2:36
மாற். 12:28-34) அவரில் புதுயுகம்
பிறந்துவிட்டது என்று கிறிஸ்தவர்கள் அறிவித்த அறிவிப்பு விழுந்தபோது பவுல்
கண்டிப்பாக கொதித்து எழுந்திருப்பார். ஆகவே பவுலின் யூதச் சமயப் பற்றார்வமும், அதற்கு எதிராகக்
கிறிஸ்தவர்கள் போதித்த போதனையும் பவுலை தமஸ்கு நோக்கிச் செல்லத் தூண்டியது என்பது
உண்மையே.
Comments
Post a Comment