பவுலும், ஏனையோரும்
தமஸ்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, உயிர்த்த இயேசு கிறிஸ்து பவுலைச்
சந்திக்கின்றார். கிறிஸ்துவும் பவுலும் முகமுகமாய்ப் பேசிக் கொண்ட இவ்வனுபவத்தைப்
பவுல் தனது கடிதங்களில் கடவுளின் வெளிப்பாடு (கலா. 1:16) என்றும், புதிய படைப்பு (2கொ. 5:17) என்றும், திருக்காட்சி (1கொ. 15:8) என்றும்
விமர்சிக்கின்றார்.
பவுலின் தமஸ்கு அனுபவத்தைப்பற்றி சிலர் பல்வேறு
கருத்துக்களை,
ஐயங்களை
எழுப்புகின்றனர்.
முதலாவது பரலோகத்திற்குச் சென்ற கிறிஸ்து பவுலுக்குக்
காட்சி தந்திருக்க முடியாது என்று கூறி, பவுல்
இயேசுவைச் சந்திக்கவும் இல்லை. பேசவும் இல்லை என்கின்றார்கள்.
இரண்டாவது பவுலின் தமஸ்கு அனுபவம் வெளிப்படையாக நடந்த
ஒரு செயல் அன்று,
அது பவுலுக்கு
ஏற்பட்ட உள்ளான அனுபவம் மட்டுமே (Subjective internal rather than objective).
மூன்றாவது பவுலின் அனுபவம் உளவியல் சார்ந்தது.
ஸ்தேவான் பொறுமையாக மரணத்தை ஏற்று இரத்த சாட்சியாக மரித்ததையும், கிறிஸ்தவர்கள்
துன்பத்திலும் பொறுமையோடு உறுதியாய் நம்பிக்கையில் நிலைத்திருப்பதையும் கண்ட பவுல், அதை பற்றியே தனது மனதில்
சிந்தித்து,
ஏன் இவர்கள்
இயேசு என்பவருக்காக,
இத்தனை
உறுதியாக இருக்கின்றார்கள் என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டே இருந்தார். இந்த
சிந்தனை பவுலுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினது. இதுவே தமஸ்கு அனுபவமாகச்
சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஸ்தேவானின் மேல் எறியப்பட்ட ஒவ்வொரு கல்லும் பவுலைக்
கிறிஸ்தவனாக கட்டி எழுப்பியது எனலாம். ரத்தசாட்சிகளாக கிறிஸ்தவ விசுவாசிகள்
மரிக்கவும் துணிந்தார்கள் என்பது பவுலின் உள்ளத்தில் ஒரு உறுத்துதலை
ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த அடித்தள உணர்வைப்
பயன்படுத்திக் கொண்டு உயிர்த்தெழுந்த ஆண்டவர் அவரை தன் வயப்படுத்திக் கொண்டார்
என்பதிலோ அல்லது அவ்வாறு ஏற்பட்ட மாற்றத்திற்கு ஆண்டவரின் தரிசனம் காரணமாயிருந்தது
என்பதையோ நாம் சந்தேகிக்கத் தேவையில்லை . (1கொரி. 15:3-8 காண்க).
பவுலின் தமஸ்கு அனுபவம் உண்மை நிகழ்ச்சியாயிராவிட்டால், வைராக்கியமிக்க பவுலின்
வாழ்வில் ஒரு பெரியமாற்றம் ஏற்பட்டிருக்காது. தமஸ்கு பாதையில் நடந்த அனுபவத்தைப்
பவுல் மட்டுமல்ல,
அப்போஸ்தலர்
நடபடிகளின் ஆசிரியர் லூக்காவும் மும்முறை இந்நிகழ்ச்சியைத் திரும்பத் திரும்பக்
கூறுகின்றார். எனவே இதை சரித்திர நிகழ்ச்சியாகக் கொள்வதே ஏற்புடையது.
பவுலின் தமஸ்கு நிகழ்ச்சி ஆதி அப்போஸ்தலர்களின்
ஈஸ்டர் நிகழ்ச்சிக்கு ஒத்தாகக் கொள்ளலாம். (காண்க 1கொ. 15:8 மு; 9:1) புதிய ஏற்பாட்டில் உயிர்த்த
இயேசுவைக் கடைசியாகச் சந்தித்தவர் பவுல் தான். தமஸ்கு நிகழ்ச்சி பற்றிய முழு
விபரங்கள் இல்லை என்பதற்காகவோ அல்லது சொல்லப்பட்டிருக்கின்ற இந்நிகழ்ச்சியில் ஒரு
சில வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பதற்காகவோ இந்நிகழ்ச்சியின் வரலாற்றுத்
தன்மையைச் சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை. வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல்.
நிகழ்ச்சியின் மையச் செய்தியும் அடிக்கடி வலியுறுத்தப்படுவதுமான இயேசு பவுலைச்
சந்தித்ததையும்,
பவுல் பெற்ற
அழைப்பையும் எடுத்துக் கொள்வதே நலம்.
Comments
Post a Comment