Skip to main content

பவுலின் சமயக்கல்வி (பவுலின் வாழ்க்கை)

 

பவுல் யூதச் சமயக்கல்வியைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்தவர் (அப் 26:24). இக்கல்வியைத் தலை சிறந்த பேராசிரியராகிய கமாலியேலிடம் திட்ப நுட்பமாகக் கற்றார் (பிலி 3:5 கலா. 1:14). கமாலியேல் என்பவர் (அப். 22:3). யூதச் சமயக்குழுக்களில் ஒன்றாகிய ஹில்லேல் (Hillel) கழகத்தை உருவாக்கியவராகிய ஹில்லேல் என்பவரின் பேரன். கமாலியேலின் தந்தையின் பெயர் சிமியோன். யூத ரபிகளுக்குள்ளே எழுவருக்கு மட்டும் தான் யூதர்கள் ரப்பான்என்ற உயர்ந்த மதிப்புமிகுந்த பட்டத்தைக் கொடுத்திருந்தார்கள். அவர்களில் ஹில்லேல், அவரது மகன் சிமியோன். அவரது மகன் கமாலியேல் ஆகிய மூவரும் இடம் பெறுகின்றார்கள். ஆகவே பவுலின் பேராசிரியரைப் போல், பவுலும் அறிவில் தேர்ந்தவராக விளங்கினார் (2கொ. 6:11).

அப்போஸ்தல நடபடிகள் நூல், எருசலேமில் கமாலியேலினிடத்தில் பவுல் சமயக் கல்வியைக் கற்றார் என்று கூறினாலும் (அப். 22:3; அப். 26:4), புல்ட்மான் போன்ற அறிஞர்கள் இதை மறுக்கின்றார்கள். இவர்கள் பவுல் தர்சு நகரிலேயே தனது சமயக் கல்வியைக் கற்றார் என்கின்றார்கள். ஏனென்றால் இவர்களின் கருத்துப்படி, பவுல் தனது மனமாற்றத்திற்குப்பின் எருசலேம் போகவில்லை (கலா. 1:22, 23). அப்படியே சென்றிருந்தாலும், எருசலேமில் தங்கி கல்வி பயின்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கின்றார்கள்.

பவுல் தனது மனமாற்றத்திற்கு முன், முப்பெரும் யூதப் பண்டிகைகளுக்குப் போயிருந்தார் என்று ஒத்துக் கொண்டாலும், எருசலேமில் தங்கி, கமாலியோலிடத்தில் சமயக் கல்வியைக் கற்றார் என்பதை மறுக்கின்றார்கள். பவுல் எருசலேமில் சமயக் கல்வியைக் கற்பதற்காகத் தங்கி இருந்திருப்பாரானால், இயேசுவைச் சந்தித்து இருப்பார். ஆனால் பவுல் இயேசுவைச் சந்தித்ததாக அவரது கடிதங்களில் எவ்விதக் குறிப்பும் இல்லை . ஸ்தேவானின் இரத்த சாட்சி மரணத்தின் போது பவுல் எருசலேமிலிருந்தார். ஸ்தேவானைக் கொன்றவர்களின் உடைகளைப் பாதுகாத்தார் (அப் 7:58) என்று அப்போஸ்தல நடபடிகள் நூல் குறிப்பிட்டாலும், அது உண்மைச் சம்பவம் அல்ல என்றும், அப்போஸ்தல நடபடிகள் நூலின் ஆசிரியர் லூக்கா , தான் சொல்லவேண்டும் என்று விரும்பியதை, வரலாற்றில் நடந்த செயல்போன்று சித்தரித்துக் காட்டுகின்றார் என்றும் கூறுகின்றார்கள். இக்கருத்தின்படியும், பவுல் எருசலேமில் தங்கி சமயக்கல்வியைக் கற்றார் என்பது பலவீனப்படுகின்றது.

வான் உன்னிக் (Van Unnik) என்ற அறிஞர் பவுல் தர்சுவில் பிறந்திருந்தாலும், எருசலேமிலேயே வளர்ந்தார் என்றும், அவர் சிறுவனாயிருந்தபோது, எருசலேமிற்குச் சென்றிருக்கலாம் என்றும், அவ்வாறு சென்றபோது அவர் அங்கு தனது சமயக் கல்வியைக் கற்றார் என்றும் கூறுகின்றார்.

பவுல் வாழ்ந்த முதல் நூற்றாண்டில், எருசலேமில் 55, 000 மக்கள் வாழ்ந்தார்கள் (J எரேமியாஸ், ''Jerusalem in the time of Jesus'' - PP. 83-84) என்றும், இவர்கள் அனைவரும் எருசலேமில் சமயக்கல்வியைப் பயின்ற மாணவர்கள் அனைவரையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறி, பவுலை எருசலேம் மக்கள் அறியாமல் போனதற்குரிய காரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றார்.

கலா. 3:10ன்படி, யூதேயாவில் வாழ்ந்த யூதமக்கள் அல்ல, யூதேயாவிலிருந்த திருச்சபையே பவுலை அறியாமலிருந்தது என்கிறார்.  இவரின் கருத்துப்படி, பவுல் வயது நிரம்பிய காலத்தில் தான், கிரேக்க தத்துவங்களையும் ஏனைய தத்துவங்களையும் அறிந்து கொண்டார் என்கிறார். கலா. 1:13மு; பிலி. 3:5மு ஆகிய பகுதிகளில் பவுல் யூதச் சமயத்தின் பால் காட்டும் ஆர்வம், அந்த ஆர்வத்திற்கான சமயக் கல்வி ஆகியவை யூதச் சமயத்தின் நடுநாயகமாய் விளங்கிய எருசலேமில் தான் இருந்தது. வேறு எங்கும், சிதறி வாழ்ந்த யூதர்களிடையே பரிசேயக்குழு இருக்கவே இல்லை என்று G. போர்ன்காம் கூறுவதை, செயூன் கிம்மும் ஆதரிக்கின்றார்.  

பவுல் தன்னை எபிரேயன் என்று அழைப்பது, பலஸ்தீனாவுடன் நெருங்கிய தொடர்பு தனக்கு உண்டு என்பதையும், சிறிது காலத்திற்கு முன் தான் பலஸ்தீனாவிலிருந்து வெளியேறி, குடியேறியிருக்கின்றேன் என்பதையும் காட்டவே என்கிறார் செயூன்கிம்.

பவுலுடைய சகோதரி எருசலேமில் இருந்தார் என்பதும் (அப். 23:16), தலைமை குருவுடன் பவுலுக்கு இருந்த தொடர்பும் (அப். 9:20) பவுல் எருசலேமில் தங்கி கல்வி கற்றிருந்திருக்க வாய்ப்பு இருந்ததை உறுதிப்படுத்துகின்றது. ஆகவே யூதச் சமயத்தின் மையமான எருசலேமிலேயே பவுல் கல்வி கற்றார் என்பது பொருத்தமானதே. 

பாபிலோனிய தால்மூட் என்ற நூல், ரபிகளின் மாணவர்களுக்கு கிரேக்கக் கலாச்சாரம் பற்றியும் போதனை கொடுக்கப்பட்டது என்று கூறுகின்றது (Bab. Sota 49p) இதனடிப்படையில், பவுல் கிரேக்க கலாச்சாரம், தத்துவம் போன்றவைகளை, எருசலேமில் தன் சமயக்கல்வியைக் கற்றக்காலத்திலேயே கற்றார் என்றும், பின்னர் தர்சு நகரில் இவைகளை இன்னும் தெளிவாகக் கற்றார் என்றும் கூற இடமுண்டு. இவ்வாறே ஏனைய கோட்பாடுகளாகிய அறிவுநெறிக் கோட்பாடு, மறைபொருள் சமயங்கள் ஆகியன பற்றிக் காலப்போக்கில் பவுல் கற்றுக் கொண்டார் என நம்ப இடமுண்டு.  

Comments

Popular posts from this blog

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பவுலும் - தர்சு நகரும் (பவுலின் வாழ்க்கை)

  பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள் , அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58 ல் பவுல் ஓர் வாலிபனாகவும் , பிலமோன் 9 ல் வயதுமிக்கவராகவும் கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும் , பின்னும் எவை எவை நடந்தன என்று ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. பவுல் ஒரு பரிசேயன் .  கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன். பக்தியும் , செல்வமும் மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும் பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5 மு ; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள் (அப் 23 : 16)  பவுலின் வாழ்விடம் :- பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின் தென்கரையில் அமைந்திருந்த...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...